வியாழன், 8 டிசம்பர், 2011

அகநானூறு


43. பாலை
[தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.]
கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி
என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி
கைமாய் நீத்தங் களிற்றொடு படீஇய
5.நிலனும் விசும்பும் நீரியைந் தொன்றிக்
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்த்
தளிமயங் கின்றே 
3தண்குரல் எழிலி, யாமே,
கொய்யகை முல்லை காலொடு மயங்கி
10.மையிருங் கான நாறு நறுநுதற்
பல்லிருங் கூந்தல் மெல்லியல் மடந்தை
நல்லெழில் ஆகஞ சேர்ந்தனம் என்றும்
அளியரோ வளியர் தாமே அளியின்
றேதில் பொருட்பிணிப் போகித்தம்
15.இன்றுணைப் பிரியும் மடமை யோரே.
- மதுரையாசிரியர் நல்லந்துவனார்.

(சொ - ள்.) 1-8. தண் குரல் எழிலி - தண்ணிய முழக்கத் தைக் கொண்ட மேகங்கள் பெய்யும் கார்காலமானது, கடல் முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை-கடலின் நீரை முகந்து நிறைந்த சூலினை யுடைய கரிய மேகம், சடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி-ஒளி மிக்க மின்னலுடன் வலமாக எழுந்துசென்று ஒலித்து, என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி - ஞாயிற்றின் வெம்மையால் வருந்திய புற்கென்ற தலையினையுடைய இளைய பெண் யானை, கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய - மேலே உயர்த்திய தன் கையும் மறையத்தக்க ஆழ்ந்த வெள்ளத்தில் களிற்றுடன் படிந்து விளையாட, நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி - நிலத்தினும் வானினும் மழைக்கால் நீர் பொருந்திச் சேர்ந்திட, குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது-குறிய நீரையுடைய நாழிகை வட்டிலால் நாழிகை அளந்து கூறுவார் கூறுலின்றி, கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர-ஞாயிறு உள்ள இடம் இதுவென அறியப்படாமையின் உலகம் அஞ்சுதலடைய, பாஅய் தளி மயங்கின்று-எங்கும் பரந்து பெய்யும் மழையொடு பொருந்திய;
8-12. யாமே-நாம், கொய் அகை முல்லை காலொடு மயங்கி - கொய்யப்படம் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின், மை யிருங் கானம் நாறும் நறு நுதல்-கரிய பெரிய காடு நாறுவதென்ன நாறும் நறிய நுதலினையும், பல்இருங்கூந்தல் - பல வகை முடி சான்ற கரிய கூந்தலினையும், மெல்லியல் - மென்மைத் தன்மையினையும் உடைய, மடந்தை நல் எழில் ஆகம் சேர்ந்தனம் - நம் தலைவியின் நல்ல அழ கடைய ஆகத்தினைப் பிரியாதிருக்கின்றோம்.
12-15. அளி இன்று - இரக்க மின்றி, ஏதில் பொருட்பிணிப் போகிய-அயலதாகிய பொருளீட்டும் பற்றுக்கொண்டு பிரிந்து சென்று, தம் இன்துணைப் பிரியும் மடமையோர் - தம்முடைய இனிய துணைவியைப் பிரியும் மடமையை யுடையோர், என்றும் அளியரோ அளியர் - எஞ்ஞான்றும் மிகவும் இரங்கத்தக்கார்.
(முடிபு) எழிலி, மழை ஏர்பு இரங்கிப் பாஅய்ப் (பெய்யும்) தளியொடு மயங்கின்று; யாம் மடந்தை ஆகம் சேர்ந்தனம்; துணைப் பிரியும் மடமையோர் அளியரோ அளியர்.
(வி - ரை.) பெய்யும் தளியென ஒரு சொல் வருவித்துரைக்க. ஒன்ற அஞசுவர என்னும் செயவே னெச்சங்கள் பெய்யும் என வரு
வித்த பெயரெச்ச வினைகொண்டு முடியும். மழை - மேகம். கைமாய் நீத்தம்: கை - நீர் ஆழம் காட்டுவார் கையுமாம். ஒன்றி - ஒன்ற எனத்திரிக்க. கன்னல் - நாழிகை வட்டில், நாழிகையுமாம். தளி - மழை, தண் குரல் எழிலி என்பது ஆகுபெயரால் கார்காலத்தை யுணர்த்திற்று. கொய் முல்லை, அகை முல்லை என்க. அகைத்தல் - தழைத்தல்; கிளைத்தலுமாம். காலொடு - காலால். மயங்குதல் - நெருங்குதல். அளியரோ அளியர் என்னும் அடுக்கு மிகுதி பற்றியது. கழைமாய் என்பது பாடமாயின் ஒடக் கோல் மறையும் நீத்தம் என்க.
                                                                                                                                                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக