வியாழன், 12 செப்டம்பர், 2013

அறுபத்து நான்கு கலைகள்

எழுத்திலக்கணம்
எழுத்தாற்றல்
கணிதவியல்
மறை நூல்
தொன்மம்
இலக்கணவியல்
நய நூல்
கணியக் கலை
அறத்துப் பால்
ஓகக் கலை
மந்திரக் கலை
நிமித்தகக் கலை
கம்மியக் கலை
மருத்துவக் கலை
உறுப்பமைவு
மறவனப்பு
வனப்பு
அணி இயல்
இனிதுமொழிதல்
நாடகக் கலை
ஆடற் கலை
ஒலிநுட்ப அறிவு
யாழ் இயல்
குழலிசை
மத்தள நூல்
தாள இயல்
வில்லாற்றல்
பொன் நோட்டம்
தேர்ப் பயிற்சி
யானையேற்றம்
குதிரையேற்றம்
மணி நோட்டம்
மண்ணியல்
போர்ப் பயிற்சி
கைகலப்பு
கவர்ச்சியியல்
ஓட்டுகை
நட்பு பிரிக்கை
மயக்குக் கலை
புணருங் கலை
வசியக் கலை
இதளியக் கலை
இன்னிசைப் பயிற்சி
பிறவுயிர்மொழி
மகிழுறுத்தம்
நாடிப் பயிற்சி
கலுழம்
இழப்பறிகை
மறைத்ததையறிதல்
வான்புகுதல்
வான் செல்கை
கூடுவிட்டு கூடுபாய்தல்
தன்னுறு கரத்தல்
மாயம்
பெருமாயம்
நீர்க் கட்டு
அழற் கட்டு
வளிக் கட்டு
கண் கட்டு
நாவுக் கட்டு
விந்துக் கட்டு
புதையற் கட்டு
வாட் கட்டு
சூனியம்

திங்கள், 2 செப்டம்பர், 2013

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்


              சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

சிறுகதையின் தோற்றம்

காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்த போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர். கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை வளத்தாலும், அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும் கேட்டதையும் விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது போக்கிற்குத் துணை நின்றனர். ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்’ என்று சுவாரஸ்ய உணர்வோடு கதை தொடங்கும் மரபும் நம்மிடையே இருந்துள்ளது. பொய்ம்மொழி, பொய்க்கதை, புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப் ‘பாட்டி கதை’ சொல்லும் மரபு உண்டு. அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்து வந்துள்ளது.
பின்பு ‘எழுத்து மரபு’ ஏற்பட்ட போது, கதைகள் பெரிய எழுத்துக் கதைகளாக எழுதப்பட்டன. பின்னர், அச்சு இயந்திர வருகைக்குப் பின்னர், அக்கதைகள் நூல்களாகவும் வெளிவந்தன. இன்றும், அவை பெரிய எழுத்துக் கதைகள் என்ற பெயரில் விற்பனையில் உள்ளன. அல்லி அரசாணி மாலை, புலந்திரன் கதை, வீர அபிமன்யு, மயில் இராவணன் கதை, சதகண்ட இராவணன் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை என்று இக்கதைகள் பல.
மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும், கீழை நாடான ரஷ்யாவிலும் சிறுகதை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி, ஓர் உணர்ச்சி, ஓரிரு பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, அரைமணி நேரத்தில், ஒரே அமர்வில் படித்து முடித்துவிடக் கூடிய கதைகள் தோற்றம் பெற்று அச்சேறின. ஆங்கிலக் கல்வியின் காரணமாக, நம்மவர்களும் அதே போன்ற கதை மரபை நம்மிடையே உருவாக்கத் தொடங்கினர். இப்படித் தொடங்கியதுதான் தமிழ்ச் சிறுகதை வரலாறு.
2.1.1 உலக மொழிகளில் சிறுகதையின் தோற்றம்
உலக நாடுகளில், மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் தான் சிறுகதை மிக விருப்பமான இலக்கிய வடிவமாகப் போற்றப்படுகிறது. நாவலை விடச் சிறுகதைக்கே அங்குச் செல்வாக்கு அதிகம். பிராங்க் ஓ கானர் (Frank O ‘Connor) என்ற சிறுகதை விமர்சகர், "அமெரிக்கர்கள் சிறுகதை எழுதுவதில் காண்பிக்கும் திறமையைப் பார்த்தால், அதை அவர்கள் தேசியக் கலையாகக் கருதுகிறார்கள் என்று சொல்லலாம்" என்று குறிப்பிடுகிறார். "அமெரிக்க மக்களிடையே இருக்கும் வேகமும் பொறுமையின்மையும் காரணமாகத்தான் சிறுகதை வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாயிற்று" என்றுவில்லியம் டீன் ஹவெல்ஸ் (William Dean Howells) என்ற மற்றொரு விமர்சகர் கூறியுள்ளார். அமெரிக்காவின் மிகச் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களாக விளங்கும் எட்கர் ஆலன்போ, நத்தானியல் ஹாதான், வாஷிங்டன் இர்விங், ஓஹென்றி ஆகியோர் உலக நாடுகள் அனைத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சிறுகதைகள் உலக அளவிலேயே மிகப் புகழ்பெற்றவை ஆகும். மெரிமீ (Merimee), பால்ஸாக் (Balzac), மாப்பசான்(Maupassant) ஆகிய சிறுகதை ஆசிரியர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாக உலகத்தினரால் அறியப்பட்டனர். இவர்களில், மாப்பசான்தான் இந்திய மொழிச் சிறுகதைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார்.
ரஷ்யாவில் செகாவ் (Chekkov), துர்கனேவ், கொகொல் (Gogol) ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள். இவர்களில் கொகொல் எழுதிய மேலங்கி(Overcoat) புகழ்பெற்ற கதையாகும். இக்கதையை முன்மாதிரியாகக் கொண்டுதான் ரஷ்யாவில் பலர் சிறுகதை படைத்துள்ளனர். அதைக் கருத்தில் கொண்டு, "கொகொலின் மேலங்கியுள் இருந்துதான் நாங்கள் எல்லாரும் பிறந்து வந்தோம்" (We all come out from under Gogol’s Overcoat) என்று கூறி, நன்றி பாராட்டுகிறார் துர்கனேவ். கொகொல், ரஷ்யாவில் ‘சிறுகதையின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
இங்கிலாந்தில் ரட்யாட் கிப்ளிங் (Rudyard Kipling), ஆர்.எல்.ஸ்டீவன்சன்(R.L.Stevenson), கதரீன் மான்ஸ்ஃபீல்ட் (Katherene Mansfield), தாமஸ் ஹார்டி(Thomas Hardy), ஜோசப் கான்ராட் (Joseph Conrad), ஹென்றி ஜேம்ஸ் (Henry James), ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joice) போன்றவர்கள் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் ஸ்ட்ரான்ட் (Strand), ஆர்கஸி (Argosy), பியர்சன்ஸ் மேகஸீன் (Pearsons Magazine) என்ற இதழ்கள் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
2.1.2 தமிழில் சிறுகதையின் தோற்றம்
தமிழ் மொழியில் அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு வீரமாமுனிவர் (1680-1749) எழுதிய பரமார்த்த குரு கதை என்ற கதை நூல், அவர் காலத்திற்குப் பிறகு, 1822இல் சென்னை கல்விச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. இந்நூல்தான், சில ஆய்வாளர்களால் தமிழின் முதல் சிறுகதை நூலாகச் சுட்டப்படுகிறது. பின்பு கதாமஞ்சரி (1826), ஈசாப்பின் நீதிக்கதைகள் (1853), மதனகாமராஜன் கதை (1885), மயில் இராவணன் கதை (1868), முப்பத்திரண்டு பதுமை கதை (1869), தமிழறியும் பெருமாள் கதை (1869), விவேக சாகரம் (1875), கதா சிந்தாமணி (1876) என்ற கதை நூல்கள் வெளியாயின. பண்டிதர் ச.ம.நடேச சாஸ்திரி, தமிழ் நாட்டில் வழங்கி வந்த செவிவழிக் கதைகளைத் தொகுத்து, தக்காணத்துப் பூர்வ கதைகள்(1880), திராவிடப் பூர்வ காலக் கதைகள் (1886), திராவிட மத்திய காலக் கதைகள் (1886) என்ற தலைப்புகளில் வெளியிட்டார். தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கி வந்த தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதை போன்ற கதைகளும் தமிழில் அச்சாயின. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் தொகுத்த விநோத ரச மஞ்சரி என்ற கதை நூல் 1876இல் வெளிவந்தது. இதில் கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம், ஏகம்பவாணன், ஒளவையார் போன்றோர் வரலாறு கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அபிநவக் கதைகள் என்ற கதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் கற்பலங்காரம், தனபாலன், கோமளம், சுப்பைய்யர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்ற ஆறு கதைகள் இடம் பெற்றிருந்தன. இவ்வாறு, தமிழில் சிறுகதை முயற்சிகள் அச்சு வடிவில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிய முடிகின்றது.

தமிழில் மேலைநாட்டு மரபை ஒட்டிய நவீனச் சிறுகதை முயற்சிகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவல் படைத்து வந்த அ.மாதவையா 1910ஆம் ஆண்டில் இந்து ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு கதையாக 27 சிறுகதைகளை எழுதினார். பின்பு இக்கதைகள் 1912இல் Kusika’s Short Stories என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1924இல், இக்கதைகளில் பதினாறை, மாதவையாவே தமிழில் மொழிபெயர்த்து, குசிகர் குட்டிக் கதைகள் என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்டார். சமூகச் சீர்திருத்த நோக்குடன் இக்கதைகளைப் படைத்ததாக மாதவையா அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்ற திரௌபதி கனவு,குழந்தை மணத்தையும், கைம்பெண் கொடுமையையும், அவனாலான பரிகாரம் என்ற கதை வரதட்சணைக் கொடுமையையும் பேசின. மாதவையா, தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட பஞ்சாமிர்தம் இதழிலும் தமிழில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். நவதந்திரக் கதைகள், வேணுமுதலி சரித்திரம், மன்மத ராணி, பூலோக ரம்பை, ஆவணி அவிட்டம், ஸ்வர்ண குமாரி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி, ரயில்வே ஸ்தானம் என்று பல கதைகளை எழுதியுள்ளார். பாரதியார் கதைகள் சம்பவங்களைப் பேசுகின்றனவே தவிர, இவற்றில் சிறுகதைகளுக்குரிய உணர்ச்சி இல்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.
வ.வே.சு. யர் 1912ஆம் ஆண்டு, கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற ஐந்து கதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட்டார். மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயன், அழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம்என்ற ஐந்து கதைகளில் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையே தமிழின் முதல் சிறுகதையாகப் பல விமர்சகர்களால் சுட்டப்படுகின்றது. வ.வே.சு.அய்யர் இக்கதையில் பாத்திர ஒருமை, நிகழ்ச்சி ஒருமை, உணர்வு ஒருமை என்ற மூன்றையும் சிறப்பாக அமைத்துள்ளதாக இலக்கிய விமர்சகர்கள் கூறுகின்றனர். வரதட்சணைக் கொடுமை இக்கதையின் கருப்பொருளாகும். ருக்மணி என்ற பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. வரதட்சணைப் பிரச்சினை காரணமாக, சாந்தி முகூர்த்தம் தடைபட்டு, கணவனுக்கு வேறு திருமணம் நிச்சயமாகியது. இதனால் ருக்மணி தற்கொலை செய்து கொள்கிறாள். தன் தவற்றை உணர்ந்த கணவன் துறவு பூணுகிறான். ஒரு மரம் இக்கதையைச் சொன்னதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இக்கதை, 1913ஆம் ஆண்டு விவேக போதினி இதழில் வெளிவந்தது. வ.வே.சு. அய்யர் காலத்திற்குப் பிறகு நாரண துரைக்கண்ணன், தி.ஜ.ரங்கநாதன் போன்றவர்கள் சிறுகதைகள் படைத்துள்ளனர். நாரண துரைக்கண்ணன் சமுதாயப் பிரச்சினைகளைப் பேசும் கதைகள் பல எழுதியுள்ளார். 1915இல் தொடங்கி, சுமார் 60 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியில் இருந்தார் அவர். தி.ஜ.ர.வின் முதல் சிறுகதை சந்தனக் காவடி ஆகும். இவருடைய புகழ் பெற்ற சிறுகதை நொண்டிக்கிளி ஆகும். கால் ஊனமுற்ற ஒரு பெண், எவரும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உணர்ந்த பின் எடுக்கும் புரட்சிகரமான முடிவே கதையாகும். கதையில், நொண்டிப் பெண்ணின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்தியத்தைப் பேசும் பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
இவ்வாறு மாதவையா, பாரதியார், வ.வே.சு. அய்யர் போன்றோர் தமிழில் சிறுகதை முன்னோடிகளாகப் போற்றப்படுகிறார்கள்.

மௌனி
லா.ச.ரா.
மு.வரதராசனார்



இக்காலக் கட்டம் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறப்பான காலக் கட்டம் எனலாம். புதுமைப்பித்தன்,கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, மௌனி போன்றவர்களும், கல்கி, ராஜாஜி, கே.எஸ்.வேங்கட ரமணி, சிட்டி, சங்கரராம், லா.ச.ரா. போன்றவர்களும் இக்காலக் கட்டத்தில் சிறுகதை எழுதியுள்ளனர்.
இவர்களில் கல்கி, நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும், பின்பு கல்கி இதழிலும் எழுதியுள்ளார்.


கல்கி எழுதியவை, வெகுஜன இதழுக்கு ஏற்ப அமைய, அவருடைய காலக் கட்டத்தில் எழுதிய புதுமைப்பித்தன் கதைகள் வடிவம், உத்தி, உள்ளடக்க முறைகளில் பரிசோதனை முயற்சிகளாக அமைந்து இலக்கிய அந்தஸ்து பெற்ற சிறுகதைகளாகச் சிறந்தன. தமிழ்ச் சிறுகதை முயற்சியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் ஆவார்.மணிக்கொடி என்ற இலக்கியப் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு மிகச்சிறந்த படைப்பு முயற்சியில் ஈடுபட்டார். மேல்நாட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் படைப்பாக்கத்தை நன்கு அறிந்த அவர், அவற்றை உள்வாங்கிக் கொண்டு, தமது சொந்தப் படைப்பாளுமையைக் கொண்டு அற்புதமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். புதுமைப்பித்தன் கேலிக்கதைகள், புராணக் கதைகள், தத்துவக் கதைகள், நடப்பியல் கதைகள் என்று பலவகையான கதைகளைப் படைத்துள்ளார். வறுமையைப் பற்றிப் பொய்க் குதிரை, ஒருநாள் கழிந்தது, பொன்னகரம், துன்பக்கேணி போன்ற கதைகளையும், புராணக் கதை மரபை வைத்துச் சாபவிமோசனம், அகல்யை அன்றிரவு போன்ற கதைகளையும், தத்துவ நோக்கோடு கயிற்றரவு, மகாமசானம், ஞானக் குகை போன்ற கதைகளையும், வேடிக்கை வினோதக் கதையாகக் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதையையும், நாட்டுப்புறக் கதைப் பாங்கோடுசங்குத்தேவனின் தர்மம், வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் ஆளுமையும் மேதைமையும் பின் வந்த படைப்பாளிகளுக்கு முன் மாதிரியாக அமைந்தன எனலாம். புதுமைப்பித்தன் சாகாவரம் பெற்ற சிறுகதைகளைப் படைத்து, தமிழ் இலக்கியக் கருவூலத்திற்கு வளம் சேர்த்துள்ளார்.
சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு
சிறுகதையின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டவை இதழ்கள். இதழ்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சிறுகதைகளும் புகழ் அடைந்தன; சிறுகதை ஆசிரியர்களும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றனர். எனவே, சிறுகதை இலக்கியத்தில் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும்போது, இதழ்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க இயலாது.
2.4.1 கலைமகள், ஆனந்த விகடன் இதழ்கள்
கலைமகள், ஆனந்த விகடன் என்ற இதழ்கள் முப்பதுகளின் தொடக்கத்தில் தோற்றம் பெற்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆனந்த விகடனை எஸ்.எஸ்.வாசன் 1928இல் தொடங்கினார். சராசரி வாசகர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர் கல்கியின் எழுத்துகளால் பரவலாக இவ்விதழ் தமிழ் மக்களால் அறியப்பட்டுப் போற்றப்பட்டது. நல்ல சிறுகதைகள் வெளியிடுவதில் இவ்விதழ் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டியது. ஆனந்த விகடன் தன் அரசியல் கட்டுரைகளாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும், சிறுகதைகளாலும் பெருவாரியான வாசகர்கள் மனங்களில் இடம் பெற்றிருந்தது. ஜெயகாந்தன்சரஸ்வதி போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தாலும், ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கிய போதுதான், அவர் வெகுஜனக் கூட்டத்தால் அறியப்பட்டார். ஆனந்த விகடன், எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளுக்கும் அவ்வப்போது இடம் கொடுத்து வந்துள்ளது. 1931 முதல் 1941 வரை, பத்தாண்டுக் காலம் விகடனில் கல்கி ஆசிரியராக இருந்த போது, புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். சிறுகதை எழுத்தாளர்களுக்குச் சன்மானம் (ஊக்கத் தொகை) வழங்கும் வழக்கத்தை ஆனந்தவிகடன்தான் முதன்முதலில் கொண்டு வந்தது.
கலைமகள் இதழ் 1932ஆம் ஆண்டு மாத இதழாகத் தோற்றம் பெற்றது. வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகையாக இல்லாமல், உயர்ந்த இலக்கியத்திற்கும், சிறப்பான சிறுகதைகளுக்கும் இடமளித்துச் செல்வாக்குப் பெற்றது. நாற்பதுகளில் மணிக்கொடி எழுத்தாளர்களும் இவ்விதழில் எழுதியுள்ளனர். பங்கிம் சந்திரர், சரத் சந்திரர், தாகூர், பிரேம் சந்த், காண்டேகர் ஆகியவர்களுடைய கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கலைமகள் இதழில் வெளிவந்தன. கலைமகளில் எழுதிய எழுத்தாளர்களும், வாசகர்களும் இலக்கியத் தரம் வாய்ந்தவர்களாக அறியப்பட்டனர். கலைமகள் இதழில் எழுதிய எழுத்தாளர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது.
2.4.2 மணிக்கொடி இதழ்
மணிக்கொடி இதழ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள்கு.சீனிவாசன், தி.ச.சொக்கலிங்கம், வரதராசனார் இவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. வரதராசனார் இதன் ஆசிரியராவார். லண்டனிலிருந்து வெளியான அப்சர்வர் என்ற ஆங்கில இதழைப் போன்று, தமிழிலும் ஓர் இதழ் நடத்த வேண்டும் என்ற முயற்சியின் விளைவே இவ்விதழாகும். இதில்பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, பி.எம்.கண்ணன் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். இவ்விதழில் சிறுகதை எழுதும் முறை, சிறுகதை பற்றிய கொள்கைகள், மேனாட்டுச் சிறுகதை முயற்சிகள் இவற்றைப் பற்றிக் கட்டுரைகள் வெளியாகின. இவ்விதழ் தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் நின்று, பின்பு பி.எஸ். ராமையாவை ஆசிரியராகக் கொண்டு மீண்டும் வெளிவந்தது. சிறுகதைக்கான இவ்விதழ், தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தது. இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகளையும் சாகா வரம் பெற்ற சிறுகதைகளையும் வெளியிட்டு இவ்விதழ் சிறப்புப் பெற்றது. அத்துடன் வாசகர்களுக்குச் சிறுகதை பற்றிய முழுமையான உணர்வினை ஏற்படுத்த முயன்றது. உலகின் தரமான சிறுகதைகளைத் தமிழ் வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் கதைகளை மணிக்கொடி இதழ் வெளியிட்டது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி, ஜப்பான் மொழி ஆகியவைகளிலிருந்தும், இந்திய மொழிகளான இந்தி, வங்காளி, மராத்தி மொழிகளிலிருந்தும் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. மணிக்கொடியில் புத்தக மதிப்புரையும், அந்த மதிப்புரையின் மீது விவாதங்களும் இடம்பெற்றன.
சிறுகதைப் படைப்பில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, உலகத் தரமான, எட்டக் கூடிய தரமான எந்நாளும் போற்றக்கூடிய கதைகளை வெளியிட்டுச் ‘சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு சிவிகையாக’ மணிக்கொடி இதழ் சிறந்தது. இதனால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இக்காலக் கட்டத்தைமணிக்கொடிக் காலம் என்று போற்றுகின்றனர்.
பேராசிரியர் சிவத்தம்பி மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி விமர்சிக்கும் போது, அவர்களை மணிக்கொடிக் குழுவினர் என்று சுட்டுகின்றார். ரகுநாதன் மணிக்கொடிப் பரம்பரையினர் என்றும், சிட்டி, சிவபாதசுந்தரம் இருவரும் அவர்களை மணிக்கொடிக் கோஷ்டி என்றும் சுட்டும் அளவு, அவர்கள் இலக்கியத் தரமான சிறுகதைகளைப் படைப்பதில் ஒன்றுபட்டிருந்தனர் எனலாம்.
2.4.3 பிற இதழ்கள்
ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி இதழ்களுக்கு முன்னர். தொடக்கத்தில் விவேக சிந்தாமணி, விவேக போதினி போன்ற இதழ்கள் சிறுகதைகளை வெளியிட்டுச் சிறுகதை வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டன. அடுத்த நிலையில் மாதவையா ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ்நேசன், பஞ்சாமிர்தம் இதழ்கள் நல்ல சிறுகதைகளை வெளியிட்டு வந்துள்ளன. பாரதியார் காலத்தில் சக்கரவர்த்தினி இதழ் சிறுகதை ஆக்கத்திற்குத் துணை நின்றுள்ளது. சுதேசமித்திரன், நவசக்தி, விமோசனம் ஆகிய இதழ்கள் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டன. சுதேசமித்திரன் வாரப் பதிப்பு, தினமணி வார வெளியீடு, ஆனந்த போதினி, அமிர்தகுண போதினி, பிரசண்ட விகடன், ஊழியன், சுதந்திரச் சங்கு, காந்தி போன்ற இதழ்களில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வந்தது. சூறாவளி (1939), பாரத தேவி (1939), கலாமோகினி (1942), கிராம ஊழியன் (1943-1947), சந்திரோதயம் (1954-47), முல்லை (1946), தேனீ (1948) என்ற இதழ்கள் வெளிவந்தன. அவ்வப்போது தோன்றி மறைந்த இவ்விதழ்களும் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்துள்ளன. பின்புசரஸ்வதி, ஹனுமான், சக்தி, எழுத்து போன்ற இதழ்கள் ஐம்பதுகளில் தோற்றம் பெற்றன. அறுபதுகளில் தீபம், இலக்கிய வட்டம், கணையாழி, நடை, கசடதபற, கொல்லிப்பாவை, யாத்ரா, பிரக்ஞை, சுவடு, அஃ, வாசகன்கண்ணதாசன் போன்ற இதழ்கள் அவ்வப்போது தோன்றின. அவற்றில் சில மறைந்தன. தீபம், கணையாழி, கண்ணதாசன் இதழ்கள் சிறுகதை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பின்னர் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் குங்குமம், குமுதம், கல்கி, தாய், சாவி, இதயம் பேசுகிறது போன்ற வார இதழ்களும் தினமலர், தினத்தந்தி போன்ற நாளிதழ்களின் வாரப் பதிப்புகளும் சிறுகதைகளை வெளியிட்டு வந்தன.சுபமங்களா, காலச்சுவடு, நிகழ், புதிய பார்வை, கவிதாசரண்புதுஎழுத்து,தாமரைசெம்மலர் போன்ற இதழ்களும் சிறுகதை வெளியீட்டில் அக்கறை காட்டி வருகின்றன. இவை தவிர மகளிர் இதழ்களான மங்கை, மங்கையர் மலர், அவள் விகடன், பெண்மணி, சிநேகிதி போன்ற இதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இதழ்கள் தலையாய இடத்தைப் பெற்றுள்ளன எனலாம்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகளின் பங்கு
இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி, சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதேபோலச் சிறுகதைத் தொகுப்பு முயற்சிகளாலும், அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்தது.
அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

செவ்வாய், 30 ஜூலை, 2013

தமிழ் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்





     





தமிழ் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

படைப்பாளரின் உணர்ச்சியனுபவமும், படிப்பவரின் உணர்ச்சி யனுபவமும் கிட்டத்தட்ட ஒன்றாகுமாறு செய்யவல்லதே கவிதை ஆகும். கவிஞனின் உணர்ச்சி கவிதையில் சொற்களாகவும், சொற்பொருளாகவும், ஒலிநயமாகவும் வடிவம் கொண்டுள்ளது. இவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு, படிப்பவர் கவிஞனின் அனுபவத்தைத் தாமும் பெறுபவராகிறார். சொற்கள் ஊடகங்கள் ஆகின்றன.
சொற்கள் அனைத்தும் குறியீடுகளே. ஒரு சொல் குறிப்பிட்ட பொருளை மட்டும் உணர்த்தும் என உரைநடைச் சொல் குறித்துக் கூறுவது எளிது. ஆனால் கவிதையில் இடம்பெறும் சொல், கையாளப்படும் சூழலுக்கேற்ப எதிர்பாராத பல பொருள்களையும் தரவல்லதாக அமைகின்றது; உணர்ச்சியை ஊட்டுவதாகின்றது.

எதுகை மோனைகளின் பொருட்டு வேண்டாத சொற்களை அடைமொழிகளாக்கியும் அசைநிலை என்ற பெயரில் வெற்றெனத் தொடுத்தும் தவிக்க நேரிடுவதை உணர்ந்தவர்கள், சொற்சுருக்கம் கருதிப் புதுக்கவிதை என்ற ஒன்றைத் தோற்றுவிக்கலாயினர். ஆங்கிலம் போன்ற மொழிகளின் வரவும், அவற்றின் தாக்கத்தால் நேர்ந்த உரைநடை வளர்ச்சியும், அச்சுவாகன வசதி வந்துவிட்டதால், மனப்பாடம் செய்யும் அவசியம் இல்லாமையும் புதுக்கவிதை வளர்ச்சிக்கு ஒருவிதத்தில் காரணமாயின எனலாம். பாரதியாரின் வசனகவிதையே புதுக்கவிதைக்கு வழிகாட்டியாகும்.
  • மரபுக்கவிதை தோற்றம்
  • தொன்று தொட்டு வரும் தன்மையுடையது என்பதை மரபு என்னும் சொல் உணர்த்தி நிற்கின்றது. இனிய ஓசை நயம் அமைந்த பாடல்களைக் கேட்டுப் பழகியவர், அதே ஓசையில் பாடல் புனைய முயன்று, பிறர் படிக்கவும், இவ்வாறே புதியன படைக்கவும் ‘பாடல் அமைப்பை’ எழுத்து, அசை, சீர் என அமைத்து ஒழுங்குபடுத்தியிருத்தல் வேண்டும். இவ்வாறு யாப்பிலக்கணம் தோன்ற, அடுத்தடுத்து வந்தவர் அம்மரபு மாறாமல் கவி படைக்கத் தொடங்கினர்.
    பாக்களையடுத்துப் பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றின. இவ்வாறுதான் பாடப்படவேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
    பாடுபொருளும் உத்திகளும் புதியனவாயினும் மரபு இலக்கணத்தின்படி படைக்கப்படுதலின் இவை மரபுக்கவிதை எனப்படுகின்றன.

  • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன குறித்த இலக்கணங்களைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. இறையனார் களவியல் உரையில் மறைந்து போன சங்க நூல்களின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை ஆகிய தலைச் சங்க நூல்களும், கலி, குருகு, வியாழமாலையகவல், வெண்டாளி ஆகிய இடைச் சங்க நூல்களும் அவ்வகை நூல்களுள் அடங்கும். சிற்றிசை, பேரிசை என்பன கடைச்சங்கத்தில் இருந்து மறைந்தவற்றுள் அடங்கும்.‘மறைந்துபோன தமிழ்நூல்கள் என மயிலை சீனிவேங்கடசாமி, இவ்வகை நூல்கள் குறித்துத் தனியொரு நூலே எழுதியுள்ளார். அவற்றின்வழி மரபுக்கவிதையின் தொன்மையை நன்கு அறியலாம்.
    தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
    சூழ்கலை வாணர்களும் - இவள்
    என்று பிறந்தவள் என்றுண ராத
    இயல்பின ளாம்எங்கள் தாய்
    எனப் பாரதியார் பாடும் பாடல், மரபுக்கவிதையின் காலத் தொன்மைக்கும் பொருந்தக் கூடியதாகும்.
    சங்க இலக்கியம், காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள் என்னும் யாவும் மரபுக் கவிதைகளால் ஆனவையே ஆகும்.
    பாரதியார் காலந்தொட்டு வரும் மரபுக்கவிதை படைப்பாளர்களும் அவர்தம் படைப்புகளும் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவேயாகும்.

    ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மரபுக்கவிதை வடிவம் இன்றும் நிலைபெற்று வருகின்றது. இலக்கியம் என்றாலே அது மரபுக்கவிதைதான் என்று விளங்கிய கால கட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் காண முடிகின்றது.
    ‘முதலில் தோன்றியது, மிகுந்த கட்டுப்பாடு இல்லாததாகிய ஆசிரியப்பாவாகும்; வரவர ஓசை நலம் கருதியும் செப்பமான நிலையை எண்ணியும் சிற்சில கட்டுப்பாடுகள் தோன்றியிருக்கும். ஆசிரியப்பாவை அடுத்து அதனோடொத்த இயல்புடைய வஞ்சிப்பா தோன்றியதெனலாம். அடுத்துக் குறள் வெண்பா உள்ளிட்ட பலவகை வெண்பாக்களும், பிறகு மருட்பாவும், அதன் பிறகு கலிப்பாவும், பரிபாடலும் தோன்றியிருத்தல் வேண்டும். அடுத்து வந்த காலத்தில் விருத்தப்பா, தாழிசை, துறை என்பன பயன்பாட்டிலமைந்தன’ என்பார் அ.கி.பரந்தாமனார்.
    யாப்பிலக்கணம் குறித்து அகத்தியம், அவிநயம், காக்கைபாடினியம், கையனார் யாப்பியல், சங்க யாப்பு, பல்காயம், பனம்பாரம், பெரிய பம்மம், மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், வாய்ப்பியம், யாப்பருங்கலம்எனப் பல்வேறு இலக்கண நூல்கள் காலந்தோறும் தோன்றி வந்துள்ளன. இந்நூல்கள் தொல்காப்பியக் காலம் சார்ந்தும், காரிகைக்கு முன்னரும் தோன்றியனவாகும்.
    காரிகைக்குப் பின், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்னும் நூல்களும் யாப்பிலக்கணம் உரைப்பனவாய் அமைந்துள்ளன.
    இருபதாம் நூற்றாண்டிலும் யாப்பிலக்கண வழிகாட்டி நூல்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன:
    (1) புலவர் குழந்தை - யாப்பதிகாரம், தொடையதிகாரம் (உரை)
    (2) அ.கி.பரந்தாமனார் - கவிஞராக (உரைநடை)
    (3) கி.வா.ஜகந்நாதன் - கவி பாடலாம் (உரைநடை)
    (4) த.சரவணத் தமிழன் - யாப்பு நூல் (நூற்பா)
    (5) ச.பாலசுந்தரம் - தென்னூல் (நூற்பா)
    (6) பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு
    (7) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - ஆசியசோதி, மருமக்கள்வழி மான்மியம்
    (8) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - தமிழன் இதயம்,
    கவிதாஞ்சலி
    (9) பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு
    (10) கண்ணதாசன் - இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி
    (11) சுத்தானந்த பாரதியார் - பாரதசக்தி மகாகாவியம், தமிழ்த் திருப்பாவை
    (12) சுரதா - சிரிப்பின் நிழல், தேன்மழை, துறைமுகம்
    (13) அழ.வள்ளியப்பா - மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி
    (14) வாணிதாசன் - கொடி முல்லை
    (15) வைரமுத்து - வைகறை மேகங்கள்
    சங்க இலக்கியத்தில் அகவலும், நீதி இலக்கியத்தில் வெண்பாவும், பிற்காலக் காப்பியங்களில் விருத்தமும், குறவஞ்சி, பள்ளு முதலியவற்றில் சிந்துப் பாடலுமாக மரபுக்கவிதை வடிவம் சிறந்து வந்துள்ளது.மரபுக்கவிதை
    நற்றமிழ், தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ் போன்ற இலக்கிய இதழ்களில் வல்லமை படைத்த மரபுக் கவிஞர்களின் படைப்புகளும், போட்டிக் கவிதைகள் பலவும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
    கவியரங்குகளில் மரபுக் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.
    பாரதியார் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், சிவாஜிகணேசன் பிள்ளைத் தமிழ் என்பன போன்ற மரபுவழி இலக்கியங்கள் இன்றும் படைக்கப் பெற்று வருகின்றன.
    மருதூர் அரங்கராசனின் யாப்பறிந்து பாப்புனைய என்னும் நூல் இன்றைய நிலையில் மரபுக்கவிதை படைப்பவர்க்கு ஏற்ற வகையில் இயற்றப் பெற்றுள்ளது. 

  • புதுக்கவிதை தோற்றம் 
  • பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது. இந்நூற்றாண்டில் மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர். 1892இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் புல்லின் இலைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக்  கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப் புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ் (Free verse) என்னும் வசன கவிதையாக அமைந்தது. அவர்தம் பாடுபொருளும் பிறர்  இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி  எமர்சன், கார்ல் சான்ட்பெர்க், லின்ட்ஸே, வாலெஸ் ஸ்டீவன்ஸன், ஸ்டீவன் கிரேன், அமி லோவல் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் வசன கவிதை படைக்கலாயினர்.
    பிரெஞ்சு நாட்டிலும், ரிம்பாடு என்னும் இளங்கவிஞர், 1886ஆம் ஆண்டுஒளி வெள்ளம் என்னும் தலைப்பில் வெர்ஸ் லிப்ரே என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார். இவரையடுத்து 1889-இல் வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை வெளியிட்டார்.
    இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின.
    பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம், இத்தாலியக் கவிஞர்களின்ப்யுச்சரிசம்ஜெர்மானியரின் எக்ஸ்பிரஷனிசம் என்பன அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து வசன கவிதைகளைத் தோற்றுவிக்கலாயின.
    ‘விட்மனின் பாடலில் எதுகை, மோனை, தளை எதுவுமே இருக்காது; வசன நடை போலவே இருக்கும்; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமே யொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயனில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார்’ என்பார் மகாகவி பாரதியார். மரபுக் கவிதையில் வல்லவரும் தம் பல்வேறு பாடல்களை அதிலேயே படைத்தவருமாகிய பாரதியார் வசன கவிதையில் விருப்புற்றவராகத் தாமும்காட்சிகள் என்னும் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.
    பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை படைக்கலாயினர்.
    புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
     பெயர்க்காரணம்
    தமிழ்க் கவிதைகளை மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பன போன்ற பெயர்களில் குறிப்பிடுகிறோம்.

    ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து எனக் காலந்தோறும் யாப்பு வடிவங்கள் செல்வாக்குப் பெற்றுவந்தன. மேனாட்டுத் தாக்கத்தால் உரைநடை செல்வாக்குப் பெற்ற நிலையில், யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி, வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது. பின்னர், யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, கட்டிலடங்காக் கவிதை போன்ற பெயர்களை அவ்வப்போது பெற்று வரலாயிற்று.
    பழக்கத்தில் உள்ள நிலையிலிருந்து சிறிதளவோ முற்றிலுமோ மாறுபட்டுத் தோன்றுவது புதுமை எனப்படும். வழிவழியாக மரபு கெடாது யாப்பிலக்கணத்தோடு பொருந்தி வரும் கவிதைகளிலிருந்து மாறுபடும் கவிதைப் படைப்புதான் புதுக்கவிதை ஆகும். புதுக்கவிதைகள் உருவத்தால் மட்டுமன்றி, உள்ளடக்கம், உத்திமுறைகள் ஆகியவற்றாலும் புதுமையுடையனவாகும்.
    இலக்கணச் செங்கோல்
    யாப்புச் சிம்மாசனம்
    எதுகைப் பல்லக்கு
    மோனைத் தேர்கள்
    தனிமொழிச் சேனை
    பண்டித பவனி
    இவையெதுவும் இல்லாத
    கருத்துக்கள் தம்மைத்தாமே
    ஆளக் கற்றுக்கொண்ட
    புதிய மக்களாட்சி முறையே
    புதுக்கவிதை                      (ஊர்வலம்)
    என மேத்தா கூறும் புதுக்கவிதை, புதுக்கவிதையின் இலக்கணத்தையும் இயல்பையும் புலப்படுத்தும். இதனை, சாலை இளந்திரையன் உரை வீச்சுஎனக் கூறுவார்.


  • புதுக்கவிதை வளர்ச்சி
  • புதுக்கவிதையைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள் மிகச் சிலரே. பலர் சமுதாய அவலம் கண்டு அவ்வப்போது கவிதைகள் புனைபவராக உள்ளனர். தனிமனித உணர்வுகளைப் பாடுவதும், நாட்டுப்பற்று, மொழியுணர்வு, பொதுவுடைமை, அநீதியை எதிர்த்தல், பெண்ணுரிமை, தலித்தியம், பகுத்தறிவு என்பனவற்றைப் பாடுதலும் இன்றைய புதுக்கவிதைகளின் நோக்கங்களாக உள்ளன.
    மரபுக்கவிதை இயற்றுவது என்பது, பெரும்பாலும் அடித்தட்டு மக்களிடத்தில் இடம் பெறாததாகவே இருந்து வந்துள்ளது. புதுக்கவிதையைப் பொறுத்தவரை பெண்கள், அடித்தட்டு மக்கள், தொழிலாளிகள் எனப் பலரும் படைப்பாளராகி விடுவதனால், தங்களின் உண்மை நிலையையும், வாழ்வியல் சிக்கல்களையும், தாங்கள் எதிர்நோக்கும் தீர்வுகளையும் தெளிவாக எடுத்துக் கூற வல்லவர்களாய் அமைகின்றனர். அவர்தம் புதுக்கவிதைப் படைப்புகளும் அவர்களின் மனநிலையையும் வாழ்வியலையும் படிப்பவருக்கு நன்கு உணர்த்துவனவாகின்றன.

    பாரதியார் தொடங்கிப் புதுக்கவிதைக் கவிஞர் பலர் நல்ல பல படைப்புகளை நல்கியுள்ளனர்.
    (1) பாரதியார் - வசன கவிதை
    (2) ந.பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை
    (3) அப்துல் ரகுமான் - பால்வீதி, சுட்டுவிரல்
    (4) வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி
    (5) மீரா - கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
    (6) நா.காமராசன் - கறுப்பு மலர்கள், நாவல்பழம்
    (7) மேத்தா - கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம்
    (8) வைரமுத்து - இன்னொரு தேசிய கீதம், திருத்தி எழுதிய
    தீர்ப்புகள், கொடிமரத்தின் வேர்கள்
    (9) சிற்பி - சர்ப்ப யாகம்
    (10) அறிவுமதி - நட்புக்காலம்

  • புதுக்கவிதையை வளர்த்தெடுத்த  இதழ்கள்
  • கி.பி.1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் குழுவினர், பாரதியாரை அடுத்துப் புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள் கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மணிக்கொடி இதழின் காலகட்டத்திலேயே ஜெயபாரதி, சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள் பல இடம் பெற்றன.
    கி.பி.1950-1970 ஆண்டுகளில் இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார் ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன. 1962-ஆம் ஆண்டு புதுக்கவிதை வரலாற்றில் சிறப்புடையதாகும்.
    எழுபதுகளில் தாமரை, கசடதபற, வானம்பாடி போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன.
    புள்ளி, வெள்ளம், உதயம், கதம்பம், ரசிகன், நீ, அலைகள், ஐஎன்னும் புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
    புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி வெளிவரலாயின. அவற்றுள் சில:
    (1) ந.பிச்சமூர்த்தி - காட்டுவாத்து
    (2) வேணுகோபாலன் - கோடை வயல்
    (3) வைத்தீஸ்வரன் - உதய நிழல்
    (4) நா.காமராசன் - கறுப்பு மலர்கள்
    (5) இன்குலாப் - இன்குலாப் கவிதைகள்
    (6) ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை
    (7) கலாப்ரியா - தீர்த்த யாத்திரை
    (8) சி.சு.செல்லப்பா - புதுக்குரல்கள்
    (9) தமிழன்பன் - தோணி வருகிறது
    (10) வல்லிக்கண்ணன் - அமர வேதனை
    (11) ப.கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள்
    (12) சி.மணி - வரும் போகும்
    புதுக்கவிதை, ஈழத்திலும் மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, க-வி-தை போன்ற இதழ்களில் சிறப்புற வளர்ந்து வந்துள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
    புதுக்கவிதை குறித்த செய்திகளையும் தெளிவினையும் புலப்படுத்தி வரன்முறைப் படுத்திய பெருமை திறனாய்வு நூல்களுக்கு உண்டு. இவை ஒரு வகையில் மரபுவழி யாப்பிலக்கண நூல்களை ஒத்தன எனலாம்.‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது வல்லிக்கண்ணன் எழுதியது. புதுக்கவிதை போக்கும் நோக்கும் என்னும் நூல் ந.சுப்புரெட்டியாரால் எழுதப்பட்டது. புதுக்கவிதை - ஒரு புதுப்பார்வைஎன்பது கவிஞர் பாலாவின் படைப்பு. புதுக்கவிதை வளர்ச்சிக்கு இத்தகு நூல்களும் பெரும்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

     முடிவுரை
     தமிழ்க் கவிதை காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உட்படப் பலரும் எளிதில் எழுதுவதாகப் புதுக்கவிதை விளங்குகின்றது. பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற கொள்கைவாதிகளும், கவியரங்கம் நிகழ்த்துவோரும், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் புதுக்கவிதை நூல்களை வெளியீடு செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்து காணமுடிகின்றது.
    நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், தை, நறுமுகை போன்ற காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும் புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.
    ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா) என்னும் வகைகளும் புதுக்கவிதையின் சாராம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன.